ஊட்டி, பிப். 12:பிரதம மந்திரியின் பிஎம்., கிசான் திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகள் மற்றும் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் உழவர் கடன் அட்டை பெற்று பயன்பெறலாம். மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது:
பிரதம மந்திரியின் விவசாயி கவுரவ நிதித்திட்ட பயனாளிகளுக்கு உழவர் கடன் அட்டையை வழங்குவதற்காக சிறப்பு பிரசாரம் மத்திய அரசால் துவக்கப்பட்டுள்ளது. இந்த பிரசாரத்தின் மூலம் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு 15 நாட்களுக்குள் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது. உழவர் கடன் அட்டையை பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் சேமிப்பு திட்ட கணக்கு உள்ள வங்கி கிளையை அணுகி உழவர் கடன் அட்டையை பெற்று மானிய சலுகையுடன் வங்கி கடன் பெறலாம். ஏற்கனவே பெற்றுள்ள விவசாயிகள் தங்களின் வங்கி கிளையை அணுகி கடன் தொகையின் வரம்பினை உயர்த்த கோரி விண்ணப்பிக்கலாம். செயல்படாத கடன் அட்டையை வைத்திருப்போர் வங்கி கிளையை அணுகி கடன் அட்டையை புதுப்பித்து கொள்ளவும் புதிய கடன் பெற அனுமதி பெறலாம்.