ஈரோடு, பிப்.7: பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைமையிட செயலாளர் வசந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமசாமி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரிகள் ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் பிரகாசம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும். அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 4 ஆண்டுகளாக வழங்காமல் உள்ள பதவி உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும்.