பொன்னமராவதி, பிப். 7: பொன்னமராவதி வட்டாரத்தில் பூச்சிகளினால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு போதிய இழப்பீடு வழங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.பொன்னமராவதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் அரசமலை கணேசபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு முடிவுகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஏனாதி ஏ.எல்.ராசு பேசினார். மாநிலக்குழு முடிவுகளை மாவட்ட துணை செயலாளர் தர்மராஜன் விளக்கி பேசினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பொன்னமராவதி தாலுகாவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை பூச்சிகள் தாக்கி நாசமாகி விட்டது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.காரையூர் கருகப்பூலாம்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அரசு நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கியுள்ள இரண்டு ஏக்கர் நிலங்களை மோசடி கும்பல் அனுபவித்து வருகிறார்கள். இது குறித்து நிலமோசடி பிரிவில் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலங்கள் வழங்கப்பட்ட 9 பேருக்கும் மீண்டும் நிலங்களை மீட்டு வழங்க வேண்டும்.