போச்சம்பள்ளி, பிப்.6:போச்சம்பள்ளி அருகே உள்ள செல்லம்பட்டி கிராமத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென ஏற்பட்ட நில அதிர்வால் பீதியடைந்த பொதுமக்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்து சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
போச்சம்பள்ளி அருகே உள்ள செல்லம்பட்டி கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணியளவில் கிராம மக்கள் தங்களது வீடுகளில் தூங்கி கொண்டிருந்தபோது திடீரென நில அதிர்வை உணர்ந்தனர். அதை தொடர்ந்து பயங்கர வெடி சத்தம் கேட்டது. அப்போது வீட்டிலிருந்த சாமான்கள் உருண்டு கீழே விழுந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள், அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியே சாலைக்கு ஓடி வந்தனர். தொடர்ந்து, பக்கத்து ஊரில் உள்ள தங்களது உறவினர்களை போன் மூலம் தொடர்பு கொண்டு நில அதிர்வு குறித்து தெரிவித்தனர். நில அதிர்வால் செல்லம்பட்டி கிராம பகுதி மக்கள் இரவு முழவதும் தூங்காமல் விழித்திருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 4 மாதங்களுக்கு முன் இந்த கிராமத்தில் இதேபோல் நில அதிர்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.