ஈரோடு, ஜன.31: ஈரோடு மாநகராட்சி வ.உ.சி.பூங்கா செல்லும் பகுதியில் வீரபத்திர வீதி உள்ளது. இந்த வீதியில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, குழாய் அமைக்கப்பட்டு திருமண மண்டபங்கள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து வரும் குழாய் உடன் இணைத்துள்ளனர். ஆனால், பாதாள சாக்கடை குழாய்களுடன் மெயின் குழாய்களை இணைக்காததால் பாதாள சாக்கடை இணைப்பு பகுதியில் உள்ள மூடி உடைந்து அதன்வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால், கடந்த 3 மாதமாக அப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.