விபத்தில் தொழிலாளி பலி

 

ஈரோடு, மே 17: ஈரோடு வீரப்பன் சத்திரம் அதியமான் நகரை சேர்ந்தவர் துரைசாமி (61). சுமை தூக்கும் தொழிலாளி. துரைசாமி நேற்று முன்தினம் இரவு அவரது மொபட்டில் வில்லரசம்பட்டியில் இருந்து கனிராவுத்தர் குளம் சாலையில் சென்று கொண்டிருந்தார். மாகாத்தம்மன் கோயில் அருகே வந்தபோது, முன்னால் சென்ற வேன் ஓட்டுநர் எவ்வித சைகையும் காட்டாமல் திடீரென சாலையின் நடுவே வேனை நிறுத்தினார். இதனால், மொபட்டில் வந்த துரைசாமி, வேன் மீது பின்புறம் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில், பலத்த காயம் அடைந்த துரைசாமி சுயநினைவை இழந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் துரைசாமியை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு துரைசாமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து துரைசாமியின் மகன் அஜய்குமார் அளித்த புகாரின்பேரில், ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, துரைசாமியின் இறப்புக்கு காரணமான வேன் ஓட்டுநரான கிரிலோகநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விபத்தில் தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: