சிவகாசி, ஜன.30: சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்று சிவகாசி யூனியன் ஆணையாளரை கிராமமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் மாரனேரி கிராமம் உள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பட்டாசு தொழிலாளர்கள் நிறைந்த இந்த கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் காரணமாக வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர முடியாத நிலை இருந்து வருகின்றது. மாரனேரி நடுத்தெருவில் அரசுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாகவும், வாகனங்கள் கடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடுத்தெருவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.