விருதுநகரில் சதம் அடித்து விளையாடும் வெயில் அனல் காற்றும் வீசுவதால் வீடுகளுக்குள் மக்கள் தஞ்சம்

 

விருதுநகர், ஏப். 24: விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வரும் நிலையில், அனல் காற்றும் வீசத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் வெளியே நடமாடாமல் வீடுகளுக்குள் தஞ்சமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் பிப்ரவரி மாதம் முதல் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் கடந்த ஒரு மாதமாக வறுத்தெடுக்கும் வெயில் அனைத்து நகரங்களிலும் 100 டிகிரியை தாண்டி அனல் காற்றுடன் அடித்து வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் 103 டிகிரியை தாண்டி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 104 டிகிரியாக இருந்தது. இருந்தாலும் அனலின் தாக்கம் 108 டிகிரிக்கு இணையாக இருந்தது. அக்கினி நட்சத்திரம் மே.4ல் துவங்க உள்ள நிலையில், அனல் காற்று வீசுகிறது.

மேலும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள தகவலின்படி, தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரிக்கும். தென் தமிழகத்தில் ஏப்.25 வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். சாலைகளில் கானல்நீர் தென்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

The post விருதுநகரில் சதம் அடித்து விளையாடும் வெயில் அனல் காற்றும் வீசுவதால் வீடுகளுக்குள் மக்கள் தஞ்சம் appeared first on Dinakaran.

Related Stories: