புதுக்கோட்டை, ஜன.28: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது விலையில்லா வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமைவீடு, சாலைவசதி, குடிநீர்வசதி, முதியோர் உதவித்தொகை, திருநங்கைகளுக்கான வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 246 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் ஆதனக்கோட்டையை சேர்ந்த மாணவி ஜெயலெட்சுமி நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்ல உள்ளதையொட்டி அவரின் பயண செலவிற்காக கூட்டுறவுத்துறை அலுவலர்கள் சார்பில் ரூ.55ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் உமா மகேஸ்வரி மாணவியிடம் வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஓ சரவணன், கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் உமா மகேஸ்வரி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.