புதுக்கோட்டை, ஜன.28: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கிராகமங்களுக்கு கூடுதலாக நகர பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள்,மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது. இந்த பகுதிகளில் மாணவர்கள் நகர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு சென்றுவருவதற்கு தங்கள் கிராமத்திற்கு வரும் நகர பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருவாரியான பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் எந்த பேருந்து இயக்கப்பட்டதோ அதே பேருந்து மட்டுமே தற்போது வரை இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். தற்போது தொடர்ந்து மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் கிராமத்தில் இருந்து நகர் பகுதிக்கு படிப்போர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இதனால் கிராமத்திற்கு வரும் நகர பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தைவிட அதிகரித்துவிட்டது. இதனால் பேருந்துகளில் படிகளின் தொங்கிகொண்டு ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணிக்கின்றனர். எனவே மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.