ஊட்டி,ஜன.24: ஊட்டி அருகேயுள்ள கக்குச்சி பகுதியில் பிடிக்கப்பட்ட கரடியை, வனத்துறையினர் ரகசியமாக அப்பர்பவானி கொண்டு சென்று விடுவித்தனர். வனப்பரப்பு அதிகமுள்ள நீலகிரியில் புலி, சிறுத்தை, காட்டுமாடுகள், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. நீலகிரியில் வன விலங்குகள் கணிசமாக அதிகரித்துள்ளன. ஆனால் அதற்கேற்ப வனப்பரப்பு இல்லாததால் வன விலங்குகள் ஊருக்குள் புகக்கூடிய சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக நீலகிரி வன கோட்டத்தில் வனத்தை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் காட்டுமாடுகள் மற்றும் கரடி நடமாட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களுக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கோத்தகிரி அருகேயுள்ள எஸ்.கைகாட்டி பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி, மஞ்சூர் அருகே கண்டி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி ஆகியவற்றை கூண்டு வைத்து பிடித்து அப்பர்பவானி வனத்தில் விடுவித்தனர். இதனிடையே கட்டபெட்டு வனச்சரகத்திற்குட்பட்ட கக்குச்சி பகுதியில் கரடி ஒன்று உலா வருவதாகவும், இதனை பிடித்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது.