மன்னார்குடி, ஜன.24: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில மாதங்களில் ஏராளமான இருசக்ர வாகனங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இதுகுறித்து வாகனங்களை பறி கொடுத்த பொதுமக்கள் மன்னார்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்களை உடனே பிடிக்க மாவட்ட எஸ்பி டாக்டர் துரை உத்தரவின் பேரில் மன்னார்குடி டிஎஸ்பி கார்த்திக், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எஸ்.ஐ.சிவகுகன் ஆகியோர் தலைமையில் 6 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப் பட்டது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எஸ்ஐ சிவகுகன் உள்ளிட்ட போலீசார் மதுக்கூர் சாலையில் உள்ள கோபிரளயம் என்ற இடத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டுக்கோட்டையிலிருந்து மன்னார்குடி நோக்கி ஒரு பல்சர் வண்டியில் இரண்டு வாலிபர்கள் வேகமாக வந்தனர். போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததை கண்ட அவர்கள் பைக்கை ரோட்டில் போட்டு விட்டு தப்பியோடினர். போலீசார் அவர்களை விரட்டி பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.