நாமக்கல், ஜன. 23: கொல்லிமலையில் உள்ள அரசு பள்ளிகளில், மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார் ஆய்வு செய்தார். மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி மாணவ, மாணவியருடன், மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார் கலந்துரையாடினார். அப்போது, குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிக்கும்படி ஆசிரியர்களை கேட்டுகொண்டார். பின்னர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட்டு பார்த்து, மாணவிகளிடம் அதன் தரம் குறித்து கேட்டறிந்தார். சேளூர்நாடு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற அவர், 10ம் வகுப்பு மாணவர்களை சந்தித்து அரசு பொதுத்தேர்வு நெருங்கி வருவதால், தேர்வுக்கு நல்ல முறையில் தயாராக வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து கொல்லிமலை மாதிரி பள்ளியில், 76 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.