நாமகிரிப்பேட்டை, ஜன. 23: நாமகிரிப்பேட்டை அடுத்த கார்கூடல்பட்டி பெருமாள் கோயில்மேடு பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள நிழற்கூடத்தை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமகிரிப்பேட்டை அடுத்த கார்கூடல்பட்டி ஊராட்சிக்கு பெருமாள் கோயில்மேடு- முள்ளுக்குறிச்சி சாலையில், பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டது. இதை முறையாக பராமரிக்காததால், உள்ளே பயணிகள் உட்கார போடப்பட்டிருந்த கான்கிரீட் சிலாப்களை சமூக விரோதிகள் உடைத்து முற்றிலுமாக சேதப்படுத்தி விட்டனர். தவிர இரவு நேரத்தில் நிழற்கூடத்தை ஆக்கிரமித்து மது அருந்துகின்றனர். காலி பாட்டில்களை உடைத்து வீசிச்செல்கின்றனர்.