புதுக்கோட்டை, ஜன.21: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமாமகேஸ்வரி பார்வையிட்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது: கிராமப்புற பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருமயம் ஊராட்சி ஊராட்சியில் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டுமான பணிகள் பார்வையிடப்பட்டது. குறிப்பாக ஏழை, எளிய மக்களின் சொந்த வீட்டுக்கனவை நனவாக்கும் வகையில் முதலமைச்சரின் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடுகள் கட்டி தரப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 13,060 பசுமைவீடுகள் ரூ.262 கோடி மதிப்பீட்டில் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதில் 12,006 வீடுகள் ரூ.260 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,054 பசுமை வீடுகள் கட்டும் பணி விரைவில் நிறைவு பெற உள்ளது.