அனைத்து துறை அலுவலர்கள்
நாகை, ஜன.22:புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க அனைத்து துறை அலுவலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட செயல் அலுவலர் செல்வம் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான திட்ட விளக்கம் மற்றும் மாவட்ட பகுப்பாய்வு அறிக்கை தொடர்பான விளக்க கூட்டம் நாகையில் நடந்தது. மாவட்ட செயல் அலுவலர் செல்வம் பேசியதாவது: தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டமானது கலெக்டர் தலைமையின் கீழ் செயல்படுகிறது. தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் உலக வங்கி நிதியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படும் தனித்துவம் வாய்ந்த திட்டம். இந்த திட்டமானது தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 120 தாலுகாவில் 3994 கிராம ஊராட்சிகளில் இரண்டு கட்டமாக செயல்படுத்தப்படும். நாகை மாவட்டத்தில் நாகை, தலைஞாயிறு, செம்பனார்கோயில், சீர்காழி ஆகிய 4 தாலுகாவில் உள்ள 147 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.