பொங்கலை முன்னிட்டு கடந்த 10 நாட்களில் விதிகளை மீறிய வாகன உரிமையாளர்களிடம் இருந்து ₹5.92 லட்சம் வசூல்

வேலூர், ஜன.21: பொங்கலை முன்னிட்டு விதிகளை மீறிய 76 வாகன உரிமையாளர்களிடம் இருந்து வரியாக ₹3.92 லட்சம், அபராதமாக ₹2 லட்சம் என மொத்தம் ₹5.92 லட்சத்தை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வசூலித்தனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிக ஆட்களை ஏற்றி செல்லுதல், உரிய பெர்மிட் இல்லாமல் பயணிகளை ஏற்றிச் செல்லுதல், டாக்ஸி என்ற பெயரில் சொந்த வாகனங்களில் பயணிகளை ஏற்றி செல்லுதல் போன்ற விதிகளை மீறும் வாகனங்களை கடந்த 11ம் தேதி முதல் நேற்று மாலை 5 மணி வரை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆய்வாளர்கள் கருணாநிதி, ராஜசேகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் விதிகளை மீறிய 46 ஆம்னி பஸ்கள், மேக்ஸி கேப் வேன்கள் 8, சரக்கு வாகனங்கள் 4, இதர வாகனங்கள் 18 என மொத்தம் 76 வாகன உரிமையாளர்களிடம் இருந்து அபராதமாக ₹2 லட்சத்து 200ம், வரியாக ₹3 லட்சத்து 92 ஆயிரத்து 50 என மொத்தம் ₹5 லட்சத்து 92 ஆயிரத்து 200 வசூலிக்கப்பட்டது. இதுதவிர வேலூர் புதிய பஸ் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் நடந்த ஆய்விலும் விதிகளை மீறிய வாகனங்களிடம் இருந்து அபராதம், வரியினங்கள் வசூலிக்கப்பட்டதாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: