ஆத்தூர், ஜன.20: பொங்கல் பண்டிகையையொட்டி ஆத்தூர் அருகே முட்டல் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் திரண்டதால், வனத்துறையினருக்கு ₹4.25 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. ஆத்தூர் ஒன்றியம் கல்லாநத்தம் கிராம ஊராட்சியில் அமைந்துள்ள முட்டல் மலை கிராமத்தில், வனத்துறைக்கு சொந்தமான கல்வராயன் மலைத் தொடரில் ஆனைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. இது சுற்றுலா தலமாக அறிவிப்பட்டுள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி, தங்கும் குடில்கள் அமைத்து பராமரித்து வருகிறது. விடுமுறை தினங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். கடந்த பொங்கல் தொடர் விடுமுறை தினங்களான 5 நாட்களில், ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு வந்து நீராடி சென்றுள்ளனர்.