நாகை, ஜன.20: கீழ்வேளூர் -திருமருகல் மார்க்கத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழ்வேளூரை அடுத்த கடம்பங்குடி, ஓர்குடி, மூங்கில்குடி, வெங்கிடங்கால், ஓக்கூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொருட்களை வாங்க கடைத் தெருவிற்கு கீழ்வேளூர் வரவேண்டும். அதேபோல் அந்த பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 6 ம் வகுப்புக்கு மேல் படிக்க வேண்டும் என்றால் கீழ்வேளூர் தான் வர வேண்டும். இந்த பகுதி மக்களின் வசதிக்காக கீழ்வேளூரில் இருந்து திருமருகலுக்கு ஓர்குடி, மூங்கில்குடி, சோழங்கநல்லூர் வழியாக திருமருகலுக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டது. அதேபோல் அரசு பேருந்தும் இயங்கியது. இந் நிலையில் கீழ்வேளூர் -மூங்கில்குடி சாலை இரண்டு ஆண்டுகளாக பழுது ஏற்பட்டு வாகனங்கள் சென்று வர முடியாத நிலையில் சாலையை காரணம் காட்டி அரசு பேருந்து நிறுத்தப்பட்டது.