ஆரணி, ஜன.14: ஆரணி அருகே கல்லூரி மாணவன் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்ததால் சுகாதார துறையினர் மருத்து முகாம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆரணி அடுத்த அக்கூர் கிராமத்தை சேர்ந்த ரவி விவசாயி, இவருடைய மகன் சதிஷ்குமார்(18) இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி சதிஷ்குமாருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை எஸ்வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு காய்ச்சல் அதிகரித்ததால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. பின்னர், மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.