மதுபிரியருக்கு பெண் கொடுக்க மறுப்பு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

மயிலாடுதுறை, ஜன.14: மயிலாடுதுறை அருகே மதுபிரியருக்கு பெண் கொடுக்க மறுத்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வானாதிராஜபுரம் பெருமாள்கோயில் தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதன்(75). இவரது மகன் சேதுராமன்(40). இவர் எலக்ட்ரிஷியனாக பணியாற்றி வந்தார். தொழில் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு தனது இஷ்ட்டம்போல் குடித்து வந்தார்.

பெற்றோர் கண்டித்துக் கேட்டுப்பார்த்தும் சேதுராமன் தன் குடியை விடவில்லை. இதற்கிடையே வயது ஏறிக்கொண்டிருப்பதை கண்ட சேதுராமனின் தந்தை தன் மகனுக்குத் திருமண ஏற்பாட்டை செய்தார். ஓரிடத்தில்கூட சேதுராமனுக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதைக் கேள்விப்பட்டதிலிருந்து சேதுராமன் சோகமே உருவாக காட்சித்தந்தார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி மதியம் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிக்கொண்டு அதில் பூச்சிமருந்தை கலந்து குடித்துவிட்டு பெருமாள் கோயில் வளாகத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டிருந்த சேதுராமன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: