நாகை, ஜன.13: நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி நிறுவனங்களின் சார்பாக நாளைய விஞ்ஞானி என்ற தலைப்பில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் அனைத்து பள்ளிகளின் சார்பாக 500 அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. கீழ்வேளூர் பிரைம் கல்லூரி தாளாளர் கோவிந்தராஜ் கண்காட்சியை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அவர் தனது சிறப்புரையில், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிகளை நடத்தி, மாணவர்களுக்கிடையிலான அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொடுத்த தலைவர் ஜோதிமணி அம்மாள், செயலர் செவாலியர் பரமேஸ்வரன் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி சந்திரசேகர் ஆகியோருக்கு நன்றி கூறினார். கண்காட்சி சிறப்புற நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த இயக்குநர் விஜயசுந்தரம், அறக்கட்டளை உறுப்பினர் அருள்பிரகாசம், கோவிந்தசாமி, மற்றும் சங்கர் கணேஷ் ஆகியோருக்கு வாழ்த்துக்களைக் கூறினார். அறிவியல் கண்காட்சியில் சிறந்த 13 படைப்புகளை தேர்ந்தெடுத்து அதில் மூன்று படைப்புகளுக்கு முதல் பரிசாக ரூ.5,000மும், 2வது பரிசாக ரூ.3,000ம், 3வது பரிசாக ரூ.2,000ம் வழங்கப்பட்டது.