கடலூர், ஜன. 13: பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியங்களில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் விளக்க அறிமுக கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 2 வட்டாரங்களில், 93 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் தொழில் செய்ய ஆர்வம் உள்ள மகளிர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஆகியோரை தொழில் முனைவோர் ஆக்குதல், விவசாயம் சார்ந்த உற்பத்தி குழுக்கள், வட்டார அளவிலான உற்பத்தியாளர் கூட்டமைப்பை உருவாக்கி அதன் மேம்பாட்டிற்கு உதவுதல், திறன் வளர்ப்பு பயிற்சி உடன் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் என எடுத்துரைக்கப்பட்டது. செயல் விளக்க கூட்டத்திற்கு மாவட்ட செயல் அலுவலர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் கார்த்திக் மற்றும் ஊரக திட்டம் செயல் அலுவலர்கள், வட்டார தலைவர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.