அயோத்தியாப்பட்டணத்தில் திமுகவை சேர்ந்த 10 பேர் சிறையிலடைப்பு

சேலம், ஜன.12:அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று, ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் நடந்தது. அதில், அதிமுக கவுன்சிலர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, 10 கவுன்சிலர்களை கொண்ட நிலையில், திமுக எப்படி தோற்கும் எனக்கூறியபடி 100க்கும் மேற்பட்ட திமுகவினர் ஒன்றிய அலுவலகம் நோக்கி வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். அந்த நேரத்தில் போலீசார், திமுகவினர் மீது கொடூர தாக்குதல் நடத்தி, 10 பேரை அதிரடியாக இழுத்துச் சென்று வேனில் ஏற்றினர். இரவில், அந்த 10 பேர் மீதும் மாசிநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் மற்றும் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், திமுகவை சேர்ந்த கோபி, தமிழ்ச்செல்வன், இளங்கோ, கண்ணன், வேலுசாமி, சுரேஷ், கார்த்திகேயன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைதான 10 பேரையும், நள்ளிரவில் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த 10 பேரும் முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பிற்காக வரும் பவுன்சர்ஸ் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: