குடியாத்தம், ஜன.12: குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி இறந்த யானை புதைக்கப்பட்ட இடத்தில் ஒற்றை யானை கண்ணீர் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் இரண்டு ஒற்றை யானை தனித்தனியாக சுற்றிதிரிந்து வந்தன. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கொட்டமிட்டா கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் ஒற்றை யானை திடீரென புகுந்தது.இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த வனச்சரகர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, அப்பகுதி மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து, மேளம் அடித்தும் ஒற்றை யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.