மயிலாடுதுறை, ஜன.10: மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை உடைப்பை சரிசெய்த பின்னர் நகராட்சி நிர்வாகம் சாலையை சரிவர போடாததால் நேற்று அவ்வழியாக சிமென்ட் மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் சிக்கியது. இதற்கு கண்டனம் தெரிவித்த பொதுமக்கள் சாலையை முறையாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை- தரங்கை சாலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் சாலை உள்வாங்கியது, சாலையை தோண்டி பாதாள சாக்கடைக்குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. சுமார் 60 அடி தூரத்திற்கு 20 அடி ஆழம் தோண்டி குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டதால் மீண்டும் சாலை அமைக்கும்போது மழை குறுக்கிட்டதால் சாலை சரிவர அமைக்க முடியவில்லை. இரண்டு மாதகாலமாக முக்கிய சாலையில் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் நகரின் தருமபுரம் சாலையில் சென்று அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கும் தரங்கம்பாடிக்கும் சென்று வருகிறது. பாதாள சாக்கடைக்குழாய் சரி செய்யப்பட்டதால் 4 சக்கர வாகனங்கள் பள்ளத்தின் இரண்டு பக்கத்திலும் சென்று வருகின்றன. இதற்கிடையே சாலை அமைக்கப்படவில்லை என்றுகூறி 60 அடிக்கும் நாற்றுநடும் போராட்டம் நடைபெற்றது. அரசு அதிகாரிகள் அந்த நாற்றுக்களை பிடுங்கி எறிந்துவிட்டனர். மேலும் அவ்வழியாக கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.