வேலூர், ஜன.10: 25 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜனவரி மாத இறுதிக்குள் சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கான விவரங்களை அனுப்பி வைக்குமாறு டாஸ்மாக் மாநில நிர்வாகம் அனைத்து மண்டல முதன்மை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் 6,800 டாஸ்மாக் சில்லரை மது விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகளில் கண்காணிப்பாளர், விற்பனையாளர், உதவியாளர் என மொத்தம் 25 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் 1200 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த வகையில் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் ஊக்கத்தொகை வழங்குவதற்காக கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.