கூடலூர், ஜன. 9: தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசின் போக்கை கண்டித்து நேற்று தொழிலாளர் நல அமைப்புகள் நடத்தும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில், தமிழக கேரள எல்லைப்பகுதியில் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்தனர். தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசிடம் ஊதிய உயர்வு, வேலைவாய்ப்பின்மைக்கு தீர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை தடுத்தல், வங்கிகளின் கட்டாய இணைப்பை நிறுத்துதல், சர்ச்சைக்குரிய சட்டங்களை நீக்குதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை தொழிலாளர் நல அமைப்புகள் முன்வைத்தன. இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால் நேற்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சிஐடியூ, ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களும், பல்வேறு தொழிற்சங்க கூட்டமைப்புகளும் பங்கேற்றன.