அரசு பள்ளி வளாகத்தில் மாணவரை பாம்பு கடித்தது

ஒரத்தநாடு, ஜன. 9: ஒரத்தநாடு அருகே அரசு பள்ளி வளாகத்தில் உட்கார்ந்து படித்து கொண்டிருந்த மாணவரை பாம்பு கடித்தது. இதையடுத்து மருத்துவமனையில் மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு- மன்னார்குடி சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலையாமங்கலத்தை சேர்ந்த சரவணன் மகன் கலைக்கோவன் பிளஸ்1 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி வளாகத்தில் கலைக்கோவன் படித்து கொண்டிருந்தார். அப்போது பள்ளி வளாகத்துக்கு ஊர்ந்து வந்த விஷப்பாம்பு கலைக்கோவனை கடித்தது. இதனால் மாணவர் மயக்கமடைந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மாணவர் கலைக்கோவன் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: