பட்டுக்கோட்டை, ஜன. 8: பட்டுக்கோட்டையில் 9 வயது மாணவர் கண்களை கட்டி கொண்டு 32.1 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி கின்னஸ் சாதனை படைத்தார்.பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன்கோட்டை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பொறியாளர் ஆனந்த் - சித்திரவள்ளி தம்பதியரின் 9 வயது மகன் ஆசிய்வ். இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்தாண்டு ஆகஸ்ட் 29ம் தேதி பட்டுக்கோட்டை நகர வீதிகளில் தனது கண்களையும் கட்டி கொண்டு 2.6 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டார். அதைதொடர்ந்து தொடர் பயிற்சி, விடாமுயற்சி மேற்கொண்டு தற்போது இந்தியன் புக்ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் நேற்று தனது 2 கண்களையும் கட்டிக் கொண்டு பட்டுக்கோட்டை நகரம் மற்றும் புறவழி சாலைகளில் 20 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டும் கின்னஸ் சாதனை முயற்சியை பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் பெரியார் சிலையில் இருந்து துவங்கினார். டிஎஸ்பி கணேசமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கண்காணிப்பாளர் ஹரீஸ் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்று மாணவர் ஆசிய்வ்வை கண்காணித்தார்.