புதுக்கோட்டை,ஜன.8: கீரனூர் பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனே குப்பைகளை அகற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பின்புறம் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கோழிக்கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகிறது. இதனை பஞ்சாயத்து நிர்வாகம் முறையாக அகற்றுவதில்லை. இதனால் அந்த பகுதியில் பெரிய அளவில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்வோர்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் நல்லூர், மாத்தூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதி தேசிய நெடுஞ்சாலை பகுதி என்பதால் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துபவர்கள் குப்பைகளை சாலையின் ஓரத்தில் போட்டுவிட்டு செல்கின்றனர். குறிப்பாக மாத்தூர் பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் குப்பைகள் கொட்டுகின்றனர்.