அரசு அறநிலையத்துறை கோயில்களில் உண்டியலை திறந்து காணிக்கையை எண்ணும் போது குறிப்பிட்ட குழுக்களை மட்டுமே வைத்தே எண்ணப்படுவதை தவிர்த்து மற்ற குழுக்களையும் அனுமதித்து முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று பூசாரிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக கோயில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் வாசு, தமிழக இந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சிறு கோயில் முதல் பெரிய கோயில்கள் வரை ஏராளமான கோயில்கள் உள்னன. இதில் பிரபல கோயில்களில் திருட்டு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் விதி மீறும் பக்தர்களை கண்காணித்து தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் அதிகாரிகள் அவற்றை முறையாக பராமரிக்காததால் பெரும்பாலான கோயில்களில் கேமராக்கள் செயல் படுவதில்லை. இதே போல் கோயில் உண்டியல் திறப்பின் போதும் பல்வேறு முறை கேடுகள் நடக்க அதிகம் வாய்ப்பு உள்ளது. அரசு கோயில்களில் உண்டியலை திறந்து காணிக்கையை எண்ணும் போது குறிப்பிட்ட குழுக்களை மட்டுமே வைத்தே எண்ணப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.