தூத்துக்குடி, டிச.31: தேர்தல் பிரசாரத்தில் அவதூறாக பேசிய அமமுக தேர்தல் பிரிவு செயலாளர் மாணிக்கராஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு ஆதித்தமிழர் பேரவையினர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாவட்டச் செயலாளர் காயல் முருகேசன் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் அருந்ததி அரசு, மாவட்டத் தலைவர் சந்தனம், மாவட்ட துணைச்செயலாளர் மகேஷ், மாநகர செயலாளர் காளிமுத்து, மாவட்ட அமைப்புச் செயலாளர் ஆதிக் மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர். மனு விவரம்: கயத்தாறு ஒன்றியம் பன்னீர்குளம் பகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற அமமுக தேர்தல் பிரிவு செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜா, பட்டியல் இனத்தை சேர்ந்த அருந்ததியர் வேட்பாளர்களை தரக்குறைவாக ஒருமையில் சாதிய வன்முத்துடன் பேசியுள்ளார்.அதற்கான ஆதார வீடியோ உள்ளது. அவரது பேச்சு அருந்ததியர் சமூக மக்களுக்கு மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சு சாதிய மோதலை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. தென்மாவட்டத்தில் அமைதி தொடர்ந்திட கடம்பூர் மாணிக்கராஜா மீது தீண்டாமை கொடுமை சட்டத்திலும், தேர்தல் விதிமுறை மீறல் விதிகளின்படியும் வழக்குபதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.