திருப்பூர், டிச.30: திருப்பூர், அடுத்த மங்கலம் அருகே கல்லுக்குழிக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலதிபர் உயிரிழந்தார்.திருப்பூர் மங்கலத்தை அடுத்த குட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (41) தொழிலதிபர். இவரது மனைவி ராதிகா (37). தம்பதியருக்கு 2 மகள்கள் உள்ளனர். பாலசுப்பிரமணியத்திற்கு அதே பகுதியில் சொந்தமாக கல்குவாரி உள்ளது. இதன், அருகே 80 அடி ஆழத்தில் கல்லுக்குழி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் கல்குவாரியில் பணியாற்றிய தொழிலாளர்கள் பணி முடிந்ததும் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று முன்தினம் காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தபோது, கல்லுக்குழிக்குள் பாலசுப்பிரமணியத்தின் கார் தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொக்லைன் இயந்திரம் மூலம் காரை மீட்டனர். அப்போது காருக்குள் பாலசுப்பிரமணியம் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.