தனியார் குடிநீர் ஆலைகளை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்

 

கோவை, மே 5: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சிவசாமி தலைமையில், நிர்வாகிகள் ஜேம்ஸ், குணசேகர், சி.தங்கவேல், கே.ரவீந்திரன், வி.ஆர்.பாண்டியன், என்.சந்திரன், எஸ்.சண்முகம் ஆகியோர் கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி தீவிரமடைந்து வருகிறது.

ஆனால், மாநகர வளர்ச்சிக்கு ஏற்ப மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை. குடிநீர் விநியோகம், குப்பை அகற்றுதல், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பை சேகரிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. குப்பை வண்டிகளில் சேகரிப்பட்ட குப்பைகளை, எடுத்துச்செல்வதற்கான லாரிகள் நாள்தோறும் வராததால், சேகரித்த குப்பைகள் தெருவோரங்களில் கொட்டப்படுகிறது.

ஆங்காங்கே குப்பை தேங்கி கிடப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பை அகற்றும் பணியை, தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். மாநகரில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். தனியார் நிறுவனங்கள் மூலம் வியாபார நோக்கத்தில், குடிநீர் விற்பனை அதிகரித்து வருகிறது. இதை, முறைப்படுத்த வேண்டும். கோவை மாநகரில் உள்ள தனியார் குடிநீர் ஆலைகளை அரசே தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

The post தனியார் குடிநீர் ஆலைகளை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: