சீர்காழி, டிச.30: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் சித்தாமிர்த தீர்த்தகுளத்தில் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் தையல் நாயகி அம்பாள் வைத்தியநாதசுவாமி உடனாகிய திருக்கோயில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் 18 சித்தர்களில் முதன்மையான தன்வந்திரி சித்தர் கோயிலில் ஜீவசமாதி அடைந்துள்ளார்.
மேலும் இக்கோயிலில் உள்ள சித்தாமிர்த தீர்த்த குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்தால் தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். இதனால் இந்த கோயிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.