திருவாரூர், டிச.16: குழந்தைகளை பணியில் அமர்த்துவோருக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986ன் படி அனைத்து இடங்களிலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அபாயகரமான தொழிலில் 18 வயதுக் குட்பட்ட குழந்தைகளையும் பணிக்கு அமர்த்த தடை செய்யப்பட்டுள்ளது.குழந்தை தொழிலாளர் சட்டத்தினை மீறி குழந்தைகளை வேலைக்கு அனுப்பி வைப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் பெறப்பட்டுள்ளது. குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் தடை சட்டத்தின்படி ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். குழந்தை தொழிலாளர் எவரும் பணிபுரிவதை கண்டறிந்தால் www.pencil.gov.in எனும் இணையதள முகவரியில் தகவல் தெரிவிக்கலாம்.