புதுக்கோட்டை, டிச.16: புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான எந்தவித விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்கள் மத்தியில் நடத்தாததால் தேர்தல் நாளன்று வாக்குபதிவு சதவீதம் அதிக அளவு குறைய வாய்ப்புள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27ம் தேதி முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக 30ம் தேதியும் நடைபெறும். குறிப்பாக ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி உள்ளிட்டவற்றிற்கு மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது.இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக அன்னவாசல், விராலிமலை, கறம்பக்குடி, குன்றண்டார்கோவில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாக வரும் 27ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதே போல் இரண்டாம் கட்டமாக புதுக்கோட்டை அரிமளம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, திருமயம், மணமேல்குடி, திருவரங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு வரும் 30ம்தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 22 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும்,225 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 497 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், 3 ஆயிரத்து 807 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 4 ஆயிரத்து 551 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் கிராம பஞ்சாயத்துகளில் ஒரு வாக்காளர் நான்கு வாக்குகள் செலுத்த வேண்டும். இதற்காக நான்கு வாக்கு சீட்டுகளை வாக்காளர்கள் பயன்படுத்த வேண்டும். மாதிரி வாக்கு சீட்டுகள் மூலம் எவ்வாறு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று எந்தவித விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தவில்லை. மேலும் சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்கள் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும், அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்று பல்வேறு வழிகளில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி பல்வேறு பேரணி, மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.