நாகர்கோவில், டிச.16: குமரி மாவட்டத்தில் கும்பப்பூ பருவ நெற்பயிர் பெரும்பாலான இடங்களில் நடவு பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் நோய் தாக்குதல் காணப்படுகிறது. மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற மேகமூட்டத்துடன் கூடிய தூறல், தொடர் மழைக்கு பிந்தைய கால கட்டம், இரவு நேர பனிப்பொழிவு, காலை நேர வெயில் ஆகியவற்றால் ஏற்படும் தட்பவெப்ப மாறுதல்கள் ஆகிய குளிர்கால சூழல் காரணமாக பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் நெற்பயிரில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுக்கும் வழிகள் தொடர்பாக நாகர்கோவில் வேளாண்மை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆனைக்கொம்பன் ஈ மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவை போல் சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடனும் இருக்கும். இதன் வாழ்க்கை சுழற்சி 14-21 நாட்களை கொண்டது. நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் அதிகம் காணப்படும். இந்த ஈ தாக்குதலால் நெற்பயிரில் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் வெண்மை நிறத்திலோ அல்லது வெங்காய இலையை போல தோன்றும். இது யானையின் கொம்பை போன்ற தோற்றத்துடன் இருக்கும். இலைகள், தாள்களில் மேல்புறத்தில் தாய் ஈக்கள், சராசரியாக 100 முதல் 150 முட்டைகள் வரை இடும், இதில் இருந்து வரும் புழுக்கள் நெற்பயிர்களில் குருத்துகளை துளைத்து குழல்களாக மாற்றிவிடும். இதனால் பயிரின் தூர்களில் நெற்கதிர்கள் உருவாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும்.
