ஓமலூரில் களை கட்டியது உள்ளாட்சி தேர்தல் ஒரே நாளில் 550 பேர் மனுதாக்கல்

ஓமலூர், டிச.13: ஓமலூரில் உள்ளாட்சி தேர்தல் களை கட்டியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 550 பேர் மனுதாக்கல் செய்தனர். ஓமலூர் ஒன்றியத்தில் 387 பதவிகளுக்கும், காடையாம்பட்டி ஒன்றியத்தில் 244 பதவிகளுக்கும், தாரமங்கலம் ஒன்றியத்தில் 196 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்காக கடந்த 4 நாட்களாக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் குறைந்திருந்த நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் சூடுபிடிக்க தொடங்கியது. ஓமலூர் ஒன்றியத்தில் காமலாபுரம் மற்றும் தாத்தியம்படி  ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் தங்களது ஆதரவாளர்கள் சுமார் 500 பேருடன் பேரணியாக வந்து  தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். நேற்று ஒரேநாளில் மட்டும் 550 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கும் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அரசியல் கட்சியினர் கூட்டணி கட்சிகளுக்கான வார்டு பங்கீடு மற்றும் வார்டு ஒதுக்கீடு செய்து, போட்டியாளர்களை இன்னும் அறிவிக்காமல் உள்ளதால், ஒன்றிய மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்வில்லை என அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.

Related Stories: