கீழ்வேளூர், டிச.13: கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய தேர்தலுக்கு வேட்புமனுவுடன் வழங்கப்படும் பொதுதகவல் படிவத்தில் நாகை ஊராட்சி ஒன்றியம் என்றுள்ளதால் வேட்பாளர்கள் குழப்படைந்துள்ளனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு வரும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியகுழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுபவர்களிடம் வேட்புமனு கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு அந்தந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் வேட்பு மனு வாங்கப்பட்டு வருகிறது. வேட்பு மனுவுடன் வேட்பாளர் பொது தகவல் படிவம் பெறப்படுகிறது. இந்த வேட்பாளர் பொது தகவல் படிவத்தை பெற்று அந்த தகவல்களை இணைய தளத்தில் பதிவு செய்யப்படுகிறது. கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட பொது தகவல் படிவத்தில் இரண்டு இடங்களில் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் என்றுள்ளது.