திருவாரூர், டிச. 11: திருவாரூர் ராமகே ரோட்டில் தினந்தோறும் ஏற்பட்டுவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு பொதுமக்களும் ,வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் நகரில் ராமகே ரோடு பகுதியில் 2 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கிவருகின்றன. இந்த 2 பள்ளியிலும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதுமட்டுமன்றி இந்த ரோடு வழியாக கொடிக்கால்பாளையம், கேக்கரை, பள்ளிவாரமங்கலம், பழையவலம், திருப்பள்ளி முக்கூடல், ஓடாச்சேரி உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மற்றும் பள்ளி கல்லூரி, மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். . இதுமட்டுமின்றி பள்ளி வாகனங்கள், மற்றும் பெற்றோர்களின் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் என காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் அரை மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை கடப்பதால் இந்த நேரத்தில் பல மணி நேரம் வரையில் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.