பாடாலூர், டிச. 10: ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேட்புமனு தாக்கலின் முதல் நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 18 பேரும் என 20 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர். உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கு வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. அதன்படி ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 18 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 39 ஊராட்சி தலைவர், 300 ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 359 பதவிகளுக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக 174 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த தேர்தலுக்காக 51 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.