இளையான்குடி, டிச. 10: இளையான்குடி பகுதியில் பொதுப்பணித்துறை அலட்சியத்தால், பாசன மடைகள், கால்வாய்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகாவில் 55 ஊராட்சிகளில், 56 பெரிய கண்மாய்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த கண்மாய்களுக்கு தண்ணீர் கொன்டுவர கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. கண்மாயிலிருந்து விவசாய நிலங்களுக்கு தேங்கிய தண்ணீரை கொன்டு செல்ல பாசன மடைகளும், நீண்ட வாய்க்கால்களும் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சீரமைக்காத வரத்துக் கால்வாய்களால் கருவேல மரங்கள் வளர்ந்து மண் திட்டு ஏற்பட்டு தூர்ந்து போயுள்ளது. மடைகள் அனைத்தும் துர்வாரப்படாததால் மண்மேடாக உள்ளது. பல பாசன மடைகள் இடிந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது. அதனால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை பொதுப்பணித்துறையினருக்கு புகார் அளித்தும், ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை என இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் கண்மாய்கள் மற்றும் பொதுப்பணித்துறை சம்பந்தமான புகார்களை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து புறக்கணிப்பதாக விவசாய சங்கங்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. கண்மாய்கள், பாசன மடைகள் சேதமடைவது நிர்வாக குளறுபடியா இல்லை, நிதி பற்றாகுறையா எனவும் விவசாயிகள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைக்கிராமம் கண்மாய், பாசன மடை சேதமடைந்து 10 ஆண்டுகளாகியும் இதுவரை சீரமைக்கவில்லை.