சேலம், டிச.10:சேலம் மாவட்டத்தில் 4,299 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல்நாளில் 309 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வரும் 27, 30ம் தேதியில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வரும் 16ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசிநாளாகும். சேலம் மாவட்டத்தில், 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 288 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 385 கிராம ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் 3,597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என ஒட்டுமொத்தமாக 4,299 பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. கிராம ஊராட்சி அலுவலகங்களில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், ஒன்றிய அலுவலகங்களில் கிராம ஊராட்சி தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடந்தது. இதில், அரசியல் கட்சியினர் யாரும் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை. மதியம் வரை அனைத்து அலுவலகங்களும் வெறிச்சோடியே காணப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மட்டும் அலுவலகத்தில் காத்திருந்தனர்.