விருத்தாசலம், டிச. 10: விருத்தாசலம் நகராட்சி ஆணையாளர் (பொ) பாண்டு வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விருத்தாசலம் நகரில் சொத்துவரி சீராய்வின்போது குடியிருப்பு கட்டிடங்களுக்கு ஐம்பது சதவீதமும், வணிக பயன்பாடு கட்டிடங்களுக்கு நூறு சதவீதமும், சொத்துவரி உயர்த்தப்பட்டதை தமிழக அரசு அரசாணை மூலம் நிறுத்தி வைத்து உள்ளது. முந்தைய சொத்துவரியே செலுத்துவதற்கு பொதுமக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை அரசு வழங்கி உள்ளது. மேலும் 13 அரையாண்டுகள் சொத்துவரி உயர்வு செய்யப்பட்ட இனங்களுக்கும் சொத்துவரி ரத்து செய்யப்பட்டு, முந்தைய வரியினையே செலுத்துவதற்கு அரசு வாய்ப்பு வழங்கி உள்ளது. எனவே, பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், தொழில்வரி, தொழில் உரிமம் கட்டணம், வீட்டு வரி போன்றவற்றை காலதாமதம் செய்யாமல் விருத்தாசலம் நகராட்சி கருவூலத்தில் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.