சீர்காழி, டிச.10:சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்மவித்யாம்பாள் சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. பிரம்மவித்யாம்பிகை சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது கூறிப்பிடத்தக்கது. கார்த்திகை சோமவாரத்தையொட்டி சங்காபிஷேகங்கள் தமிழகத்தில் ஒருசில கோயில்களில் மட்டுமே பண்டைய காலத்தொட்டு நடைபெற்று வருகிறது. அதில் ஒருகோயிலாக இந்த கோயில் விளங்குவது கூறிப்பிடத்தக்கது. நேற்று கார்த்திகை நான்காவது சோமவாரம் மற்றும் பிரதோஷம் ஆகிய ஒரே நாளில் வந்தது மிகவும் விஷேசமானது என கூறிப்பிடத்தக்கது. இதனையொட்டி சுவேதாரண்யேஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி 1008 சங்குகள் சிவ வடிவத்தில் சன்னதியின் முன்பகுதியில் வைக்கப்பட்டு அலங்கரிக்கபட்டு இருந்தது. மேலும் சங்குகளில் நறுமணப்பொருட்களால் ஆன புனிதநீர் நிரப்பட்டது.