கோவை, டிச.9:கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள 2206 உள்ளாட்சி பதவிக்கான தேர்தலுக்கு போட்டியிட விரும்புவோர் இன்று முதல்வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக வரும் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் வரும் 16ம் தேதி வரையும், வேட்புமனு வாபஸ் பெற 19ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் 228 கிராம ஊராட்சிகளில் 2,034 வார்டு கவுன்சிலர், 155 மாவட்ட கவுன்சிலர், 228 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி, 17 மாவட்ட வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு பெற சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.