கடலூர், டிச. 9: கடலூரில் பாதாள சாக்கடை குழாய்கள் மற்றும மேன்ஹோல்கள் உடைந்து நொறுங்கி கழிவு நீர் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து பாய்ந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் செம்மண்டலம் பகுதியில் ரட்சகர் நகர், ரமணா நகர் குடியிருப்புகளில் ஏராளமான வீடுகள் உள்ளன. பெரும்பாலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்புகளின் பின்பகுதியில் (அரசு ஐடிஐ பின்புறம்) உள்ள பாதாள சாக்கடையின் மேன் ஹோலில் உடைப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு வாரங்களாக கழிவு நீர் பம்ப் செட்டிலிருந்து வருவதை போல வெளியேறி அந்த பகுதி முழுவதும் சக்கடை குளமாக மாறியுள்ளது.இது முழுக்க முழுக்க செப்டிக் டேங்க் கழிவுநீராக இருப்பதால் துர்நாற்றம் வீசி பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. வடிகால் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. அரசு ஐடிஐ மாணவ, மாணவிகளும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நகராட்சி ஆணையர், சுகாதார ஆய்வாளர் ஆகியோரிடம் முறையிட்டும் அந்த இடத்தை நேரில் வந்து பார்த்து சுகாதார சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காதது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.