கடலூர், டிச. 5: கடலூர் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை வெள்ள நீர் வடிவதற்கான நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் நகராட்சி மெத்தனப் போக்கால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். கடலூர் நகரம் 45 வார்டு பகுதியை கொண்டது. கோண்டூர், பாதிரிக்குப்பம், குண்டு உப்பலவாடி உள்ளிட்ட புறநகர் பகுதிகள் அமைந்துள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி முதல் கடலூர் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழை தற்பொழுது நின்று உள்ள நிலையிலும் மழை வெள்ள நீர் வடியாத நிலை பல்வேறு நகர் பகுதியில் காணப்படுகிறது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர், பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம் போன்ற குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தொடர்ந்து தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. மழைநீர் வடிகால் முறையான செயல்பாடு இல்லாததால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று முதுநகர் பகுதியில் உள்ள பீமா நகர், சான்றோர்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும் குப்பைகள் கழிவுநீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள துரைசாமி நகர், வண்ணார பாளையம், வில்வ நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேக்கம் கழிவுநீருடன் கலந்து பொதுமக்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நகராட்சி நிர்வாகம் உரிய வடிகால் வசதியை மேம்படுத்தாமல் இருப்பதால் மழைவெள்ள நீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.